My world according to me

Wednesday, June 17, 2015

உலக திரைப்படங்களும் தமிழ் திரைப்படங்களும்!

(கவனிக்க: நான் இன்னும் “காக்கா முட்டை” பார்க்கவில்லை. அதனால் இந்த பதிவு அந்த திரைப்படத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை)

திரைப்படங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலோடு முற்றிலும் கலந்துவிட்ட ஒன்று. அதனை பிரிக்க நினைப்பதும், கர்ணனின் கவசக்குண்டலத்தை பிரிக்க நினைப்பதும் ஒன்றே. அந்த அளவுக்கு நம்மிடையே நீக்கமற கலந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஃபேஸ்புக்கில், `தமிழ் சினிமா ஹிந்தி சினிமாவைவிட 50 வருடங்கள் பின்னடைந்து இருக்கிறது’ என்று எழுதினேன். அதன் பிறகு நண்பர்கள் சிலர் வெகுண்டெழுந்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஏன் அப்படி சொன்னேன் என்பதனின் விளக்கம் தேவை என்று எனக்குப் பட்டது.

திரைப்படம் ஒரு பொழுதுப்போக்கு அம்சம் மட்டுமே. அதற்கு இத்தனை முக்கியத்துவம் தேவையில்லை என்று ஒரு சாரர் முதலிலேயே புறம் தள்ளி விடுவார்கள். அவர்கள் இதற்கு மேல் படிக்கத் தேவையில்லை. உங்கள் பொன்னான நேரத்தை மற்ற முக்கிய பணிகளுக்கு செலவிடுங்கள். தமிழ் படங்களில் சகாப்தம் வரை எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. ’சகாப்தம்’ யார் படம் என்று கேட்டீர்கள் என்றால் நீங்களும் தயவுசெய்து இதற்கு மேல் படிக்கவேண்டாம். அதனைவிட முக்கியமான ஒன்று, என்னிடம் தமிழ் படங்களே சிறந்தது என்று வாதிட வேண்டாம். ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் படங்களை ஒரு மாமாங்கத்துக்கு ஒன்று என்ற கணக்கில் பார்க்கும் உங்களுடன் என்னால் வாதிட முடியாது! :)

அதிகம் திரைப்படங்களை பார்க்காத சிலர், “நீ எப்படி அப்படி சொல்லலாம். யாம் அறிந்த மொழிகளிலே டமிலே சிறந்தது. அதுப்போல டமில் திரைப்படங்களும் சிறந்தது. காஞ்சனா2, மங்காத்தா, அசல் போன்ற திரைக்காவியங்கள்..” என்று எவரேனும் புறப்பட்டீர்கள் என்றால் நிற்க. உங்களோடும் நான் வாதிட விரும்பவில்லை. இப்போதே சொல்லிவிடுகிறேன், “டமில் திரைப்படங்களே சிறந்தது! நன்றி!!”

ஹிந்தி திரைப்படங்கள் 90களின் இறுதியில் தாவூத்தின் பிடியிலிருந்து வெளியே வரத் தொடங்கியது. அதுவரை பியார், மொஹபத், தில், லவ் என்ற கோணத்திலேயே திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது என்று என்னால ஆணித்தரமாகச் சொல்ல முடியும். குறிப்பாக சமீபத்தில் வந்த திரைப்படங்கள் அதனை நிரூபணம் செய்கிறது. ஹிந்தி திரைப்படங்கள் உலகத் திரைப்படங்களா என்றால்.. வெகு சில படங்களை மட்டுமே சொல்ல முடியும். இருப்பினும் தமிழ் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது தரம் பல மடங்கு உயர்வாகவே இருக்கிறது. Kahaani, Special 26, Baby, OMG, Piku அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இது வரை இந்த திரைப்படங்களை பார்க்கவில்லையென்றால் தயவுசெய்து பார்த்துவிட்டு வந்து சண்டைக்கு வாருங்கள்!

சரி எது உலக திரைப்படம்?  தன்னுடைய கலாச்சாரத்தையும், அடையாளத்தையும், வாழ்க்கை முறையையும், மிகையில்லாத நடிப்போடும், இயல்பான அழகியலோடு சொல்லும் எந்த திரைப்படமும் உலகத் திரைப்படமே. (ஈரான்) மஜித் மஜிதியின் படங்கள் அதற்கு சிறந்த உதாரணம். அவருடைய படங்களில் "Children of heaven, Song of sparrows” மிக முக்கியமான படைப்புகள். மிடில் ஈஸ்ட் என்றாலே Sheik/Prince பணக்காரர்கள் என்று எண்ணும் நம்மை ஈரானில் உள்ள விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அநாயசமாக சொல்லியிருப்பார். இதுவரை தமிழ் படங்கள் அதனை சொல்லவில்லையா என்றால்.. மன்னிக்கவும்.. இது வரை நான் பார்க்கவில்லை. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் சொல்லாததா என்று உங்கள் இருக்கையிலிருந்து கூவுவது கேட்கிறது. அவை தமிழில் வந்த சிறந்த திரைப்படம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு! அவ்வளவே!!

நாளொன்றுக்கு ஒரு திரைப்படமாவது பார்த்துவிடும் எனக்கு ஒரு கட்டத்தில் தமிழ் திரைப்படங்கள் போதவில்லை. மெல்ல மலையாளம், தெலுகு, ஹிந்தி, ஹாலிவுட், ஈரானியன், கொரியன், ஸ்பானிஷ், ஃப்ரெஞ்சு படங்கள் என்று விஸ்தரித்து பார்க்கத் தொடங்கினேன். அதற்கு நெட்ஃபிலிக்ஸ் மிகவும் உதவுகிறது. எல்லா மொழிகளிலும் குப்பைப் படங்கள் வருகிறது. மறுக்க முடியாது. ஆனாலும் அவ்வப்போது பரந்து விரிந்த இருண்ட பிரபஞ்சத்தில் மிளிரும் நட்சத்திரமாக ஒரு சில நல்லப் படங்கள் வருகிறது.

அப்படித்தான் யாரோ ஒருவர் “எனக்குள் ஒருவன்” (கன்னடப் படம் லூசியாவின் தமிழாக்கம்) பார்த்துவிட்டு, `நோலனுக்கே (Christopher Nolan) சவால்’ என்று பதிவிட்டிருந்தார். படித்துவிட்டு ஒரு கணம் திகைத்துவிட்டேன். எனக்கு அவருடைய அறியாமையை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. இன்னும் சிலர் (விசிலடிச்சான் குஞ்சுகள் மட்டும் அல்ல சில பிரபலங்களும் அதில் அடக்கம்) அஜித் மங்காத்தாவில் (பில்லாவா?) டூப் போடாமல் ஹெலிகாப்டர் சீன் நடித்திருக்கிறார் என்று பிணாத்திக் கொண்டு இருந்தனர். 1987ல் மலை உச்சியிலிருந்து டூப் போடாமல் பறக்கும் பலூனுக்கு ஜாக்கி சான் தாவுவார்.

இன்னொன்றும் அவசியம் சொல்லவேண்டும். ஏன் தமிழ் சினிமாக்கள் தரமிழந்து இருக்கிறது என்று ஆராய்ந்தால், அந்த குற்றம் நம்மையே சாரும்! செயற்கையான/பகட்டுப் படங்களுக்கு தரும் ஆதரவை நாம் என்றுமே ‘தரமான’ திரைப்படங்களுக்கு தந்தது இல்லை. அப்படியே தரமான படம் வந்துவிட்டாலும், திரையரங்குக்கு சென்று ஆதரவு தருவோர் எத்தனை பேர். சென்ற வாரம் “Dil Dadakane do" பார்க்கப் போயிருந்தேன். படம் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் இருந்த போதும், அரங்கம் நிறைந்து இருந்தது. நண்பர்கள் நாங்கள் தனித்தனியே உட்கார வேண்டியிருந்தது! எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக ரசித்தனர்! திரையில் ஹீரோவின் பெயரை பார்த்து பரவசம் அடையவில்லை! நறுக்கிய பேப்பர் துகள்களை எறியவில்லை!
மைனா திரைப்படத்தை தனி ஒரு ஆளாக பார்த்ததை நண்பர் ரமேஷ் அடிக்கடி சொல்லி வேதனைப்படுவார். திரைப்படம் வந்த ஆறு மணி நேரத்தில் திருட்டு விசிடி பதிவு இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதனை பார்க்கும் எவருக்கும் என்னிடம் தயவு செய்து வாதம் செய்ய வரவேண்டாம்.

எது ’தரம்’ என்றே தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எனது வாதம் என்றும் புரியப் போவதில்லை!


0 Comments:

Post a Comment

<< Home