My world according to me

Sunday, February 16, 2014

நாணயத்தின் பக்கங்கள்

கிர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர் அலைப்பேசி உறுமியது. சனிக்கிழமை அதுவுமா  இவ்வளவு காலையில யாராயிருக்கும் என்று அலுத்துக்கொண்டே அலைப்பேசியை எடுத்தாள் திவ்யா. மறுமுனையில் அவளது கல்லூரித் தோழி காவேரி.  இவ்வளவு காலையில் ஏன் காவேரி கூப்பிடுகிறாள்?

"என்னடி இவ்வளவு காலையில?" என்றுக் கேட்டாள் திவ்யா.

"இவருக்கு உங்க ஊருல வேலை. எனக்கு என்ன புள்ளயா குட்டியா? அதான்  நானும் அவர் கூட வர்றேன். உன்னையும் குட்டீஸ்களையும் பார்த்தது போல இருக்குமே. அதான் உனக்கு சொல்லிட்டு வரலாமேனுதான் ஃபோன் பண்ணினேன்."

"என்னிக்குடி வர்றே?"

"நான் முதல்ல சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நெனச்சேன். ஆனா சுரேஷ்தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு. நான் வியாழக்கிழமையே வந்துட்டேன்."

"வியாழக்கிழமையே வந்தவ நேரா இங்க வரவேண்டியதுதானே?"

"இல்லடி.. நான்தான் கார் ஓட்ட மாட்டேன்ல. சுரேஷ் இல்லாம என்னால தனியா வரமுடியாது. அதான் வீக் என்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்."

"சரி சரி காலையில டிபனுக்கே வந்திடு என்ன?"

"ஏய் இல்லடி.. நான் மதியானம் சாப்பாடுக்கு வந்திட்டு நாலு மணிக்கு கெளம்பிடுவேன். ஆறு மணிக்கு ஃப்ளைட் இருக்கு. போயாகணும்டி" என்றாள் காவேரி சோகமாக.

"எனக்கு முன்னாடியே சொல்லியிருந்தா நானே உன்ன வந்து பார்த்து இருப்பேனே? ஏண்டீ இப்படிப் பண்ணிட்டே? சே உன் கூட நல்லா ஊர் சுத்திட்டு இருந்திருக்கலாம். இப்படி ஒரு நல்ல சான்ஸ கெடுத்திட்டியேடீ"

"ஆமாம்டீ.. சொதப்பிட்டேன்..  சரி பத்து மணிக்கே வந்திடுறேன். உன் பொண்ணு ஷிவானியையாவது பாத்திருக்கேன். முகிலனை ஃபேஸ்புக்ல பார்த்ததோடு சரி.. ரொம்ப ஆசையா இருக்குதுடீ!" என்றாள் காவேரி.

"சரி.. நீ நேர்ல வா பேசிக்கலாம்" என்று அலைப்பேசியைத் துண்டித்தாள் திவ்யா.

"என்னாங்க.. எழுந்திரிங்க"

கண்ணன் கண்ணை இறுக்க முடிக் கொண்டான். தூங்குவது போல் பாசாங்குச் செய்தான். திவ்யாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"இப்ப எழுந்திரிக்க போறீங்களா இல்லையா? என் ஃப்ரெண்ட் காவேரி வர்றேன்னு சொல்லியிருக்கா. வீட்ட ஒதுங்க வைக்கணும் அவ வர்றதுக்குள்ள நெறைய வேலை செஞ்சாகணும்.. எழுந்திரிங்க" என்றாள் திவ்யா.

அலுத்துக் கொண்டே எழுந்தான் கண்ணன். காலை கடன்களை முடித்து இருவரும் வேக வேகமாக வீட்டைச் சுத்தம் செய்தார்கள். குழந்தைகள் ஷிவானியும், முகிலனும் சத்தம் கேட்டு எழுந்து வந்து உதவிச் செய்தனர். மணி பத்து அடிக்க வாசலில் சுரேஷும் காவேரியும். முகிலனும் ஷிவானியும் ஓடிச் சென்று கதவைத் திறக்க... காவேரிக்கு மெத்த மகிழ்ச்சி!

"முகில்ல்ல்ல்ல் லவ் யூடாச் செல்லக்குட்டி.. ஆன்ட்டியத் தெரியுதா? ஷிவானி மை டியர் செல்லப் பொண்ணே.. பெரிய பொண்ணா ஆயிட்டேடீ!!!" என்று இருவரையும் வாரியணைத்து முத்தமிட்டாள் காவேரி.

காவேரியின் சந்தோஷம் சுரேஷின் முகத்தில் தெரிந்தது.

"இந்தாடா முகில்.. உனக்கு பிடிச்ச மாரியோ கேம். திவ்யா ஃபேஸ்புக்ல நீ அடிக்கடி நீ சோனி ப்ளே ஸ்டேஷனில வெளயாடுற விளையாட்டுனு சொன்னா. ஆனா இந்த கேம் உன்கிட்ட இருக்கானு தெரியல" என்றாள் காவேரி.

"இல்ல ஆன்ட்டி.. இந்த கேம்தான் நான் அம்மாக்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க கரெக்டா  வாங்கிட்டு வந்திட்டீங்க" என்று ஆங்கிலத்தில் சொன்னான் முகில்.

"எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்றுக் கேட்டாள் ஷிவானி.

"உனக்கு இல்லாமலா செல்லப் பொண்ணு. உனக்காக லூம் கிட் வாங்கிட்டு வந்திருக்கேன். உனக்குத்தான் ப்ரேஸ்லட் பண்ண பிடிக்குமெ"

"தேங்கஸ் ஆன்ட்டி" என்றாள் ஷிவானி.

"ஏய் இப்படியா வந்தவங்கக்கிட்ட கிப்ஃட் வேணும்னு கேட்கிறது? என்ன இது கெட்ட பழக்கம்?" என்றாள் திவ்யா மிகக் கோவமாக.

"விடுடீ திவ்யா. அத்தைக்கிட்ட உரிமையா கேட்காம வேற யாருக்கிட்ட கேட்கப் போறாங்க" என்றாள் காவேரி.

"உனக்கு தெரியாதுடீ இந்த பிசாசுங்களப் பத்தி. எப்பப் பாரு எனக்கு இத வாங்கிக் கொடு.. அத வாங்கிக் கொடுனு பிராண்ண வாங்குதுங்க"

"என்னடீ பெத்தப் புள்ளங்கள இப்படியா கரிச்சுக் கொட்டுறது?" என்று கடிந்துக் கொண்டாள் காவேரி.

"உனக்கு தெரியாதுடீ.. என் உசிர எடுக்குதுங்க இந்த ரெண்டு வானரங்களும். எப்படா ஸ்கூலுக்கு போகும்னு நான் டெய்லி வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன்.  இந்த ரெண்டு பிசாசுங்களும் என் உயிர எடுத்திட்டுத்தான் மறு வேலை இதுங்களுக்கு" என்றாள் சலிப்புடன் திவ்யா.

இரண்டு பிள்ளைகளும் செய்யும் அனைத்து காரியங்களையும் பட்டியலிட்டு ஒப்பித்தாள். எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் காவேரி.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, சுரேஷும் கண்ணனும் தனியாக ஒதுங்கி ஸ்காட்ச் விஸ்கி அடித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் போனதே தெரியவில்லை அனைவருக்கும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தனர்.

மணி நான்கைத் தொட அவசர அவசரமாக புறப்பட்டாள் காவேரி. சுரேஷும் காவேரியும் குழந்தைகளை கட்டியணைத்து, ஆசிர்வதித்து புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற அடுத்த நிமிடமே கண்ணன் திவ்யாவைப் பார்த்து, "ஏண்டி இப்படி கொழந்தைங்கள கரிச்சுக் கொட்டின? அவங்க உன்ன என்னக்குடீ படுத்தினாங்க?" என்று சண்டைக்கு வந்தான்.

திவ்யா பொறுமையாக, "இல்லைங்க.. காவேரிக்கு குழந்தைங்க இல்ல. அவ மனசு ஏங்கிடக் கூடாதுனுதான் பிள்ளங்க எமகாததுங்கனு சொன்னேன். பாவங்க அவ" என்று பரிதாபப்பட்டாள். அங்கே நிசப்தம் நிலவியது. அனைவருக்கும் சூழ்நிலைப் புரிந்தது.

காருக்குள் நுழைந்தவுடன் காவேரி ஓவென்று அழத் தொடங்கினாள். சுரேஷ், "ஏன்மா.. என்ன ஆச்சு? இப்ப எதுக்காக அழற" என்றுக் கேட்டான்.

"எனக்கு இந்த மாதிரி கரிச்சுக் கொட்ட புள்ளைங்க இல்லாம போயிட்டாங்களே. எனக்கு அத நெனச்சாத்தான்... " மேலும் சொல்ல வார்த்தையில்லாமல் சத்தமாக அழத் தொடங்கினாள் காவேரி.

நாணயத்தின் இரு பக்கங்கள்.

Thursday, February 13, 2014

தொலைந்துப் போன காதல்(+இ)

"அப்பா.. அப்பா... ப்ப்பா.. எனக்குப் பசிக்குது" என் செல்ல மகள் ஆனந்தி என்னை உலுக்கி எழுப்பினாள். ஒரு புறம் இவள், இன்னொரு புறம் தூக்க கலக்கம் இழுக்க, நடுவில் நான். வென்றதென்னவோ என் செல்ல மகள். இருக்காதாப் பின்னே?! அவள் சொன்னது பசிக்குதுனு. சற்று தாமதம் என்றாலும் மூளைக்குள் சென்று தூக்கத்தை விரட்ட சில வினாடிகள் பிடித்தது. சடாரென்று புரிந்தவன் விருட்டென எழுந்தேன். என் மனைவி சௌம்யா புரண்டு படுத்தாள். அவள் தலையை வருடிக் கொடுத்து முத்தம் கொடுத்தேன். என் மகளும் அவள் பங்குக்கு ஒன்றுக் கொடுத்தாள்.

"என் தூக்கத்தைக் கெடுக்காதீங்க. அவளுக்கு ஏதாவது கொடுங்க. நான் தூங்கறேன்" என்றாள்.

"ஷ்ஷ்ஷ்ஷ்.. அம்மாவ எழுப்பாதே" என்று மெல்லியக் குரலில் செல்லிக்கொண்டே அவளைத் தூக்கிக் கொண்டேன். மணி 5.30 கூட ஆகவில்லை. ஞாயிற்றுக் கிழமை வேறு. இன்று சற்று அதிக நேரம் தூங்கலாம் என்று நினைத்தேன். ஹூம்!

"ஏன்மா அம்மாவ எழுப்பி கேட்கவேண்டியதுதானே.. எப்பவும் என்னையே எழுப்பறே?" என்று படுக்கையறையை விட்டு வெளியே வந்தப்பிறகுக் கேட்டேன்.

"அப்பா, அம்மா எழுந்திரிக்க மாட்டாங்க. நீங்கத்தான் என் ஃபேவ்வரிட்!" என்று எப்போதும் வைக்கும் ஐஸ் வைத்தாள். எனக்குத் தெரியும் இதுதான் சொல்லுவாள் என்று. இருந்தாலும் அவள் வாயால் கேட்பது ஒரு தனி சுகம்!

அவளை டைனிங் டேபிளில் உட்கார வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜ்ஜுக்கு மேல் வைத்திருந்த சீரியல் ஒரு கிண்ணத்தில் போட்டு பாலை ஊற்றி டேபிளில் வைத்தேன். "சிந்தாம சாப்பிடு. சாப்பிட்டு முடிச்சிட்டு ப்ரஷ் பண்ணியிருக்கனும். சரியா?" சரி என்று தலையாட்டினாள் ஆனந்தி.

நான் முகநூலில் தஞ்சமடைந்தேன். கல்லூரி நண்பன் ஒருவன் 25வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தான். அவனுக்கு வாழ்த்து எழுதிவிட்டு லைக் போட்டுவிட்டேன். நானும் அவனைப் போல் கல்லூரி முடிந்ததும் ஆனந்தியைக் கைப்பிடித்திருந்தால், இந்நேரம் எனக்கும் 25 வருடம் ஆகியிருக்கும்! யாரோ ஒருவர் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பி இருக்கிறார். யாராக இருக்கும் என்று அவரின் ஃப்ரொபைலுக்கு சென்றால், அங்கே அவரின் முகமாக தெரிந்தது மஞ்சள் ரோஜாப்பூ. பெயரைப் பார்த்தேன் லக்ஷ்மி சுப்ரமணியம் என்று இருந்தது. தன்னுடைய ஃபோட்டோக் கூட போட துணிவில்லை. இவர்களுக்கெல்லாம் எதுக்கு முகநூல் என்று எண்ணிக் கொண்டே இக்னோர் செய்துவிட்டேன்.

மனம் ஏனோ பழைய நினைவுகள் அசைப் போடத் துவங்கியது. அன்று கல்லூரி ஆண்டு விழா. நானும் என் நண்பன் விக்னேஷும் கல்லூரிக்கு வெளியேச் சென்று அவனுடைய ரூமுக்குச் சென்றோம். வாங்கி வைத்திருந்த ஓல்ட் மாங்க் ஒரு ஃபுல் ஓபன் பண்ணி அடித்தோம். கோல்ட் ஃப்ளேக் சிகரெட் ஒரு பாக்கெட் முடிந்திருந்தது. நடக்கப் போகும் விபரீதம் அறியாமல் கல்லூரிக்குள்  போதையோடு நுழைந்தோம். ஓரமாக இடம் தேடி உட்கார, ஆனந்தி மேடையேறினாள். அடித்த சரக்கா, இல்லை ஆனந்தியா என்று தெரியவில்லை.. போதைத் தலைக்கேறியது! ஆனந்தியை பார்த்த நாள் முதலாகவே என்னுள் காதல் வந்துவிட்டது. அவள் கடவுள் வாழ்த்து பாடப் பாட விருட்டென எழுந்தேன். வேக வேகமாய் மேடையை நோக்கி "ஐ லவ் யூ ஆனந்தி" என்று குளறிக் கொண்டே போனேன். நான் சொன்னது யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பேயில்லை. மேடைக்கு அருகே செல்ல வாந்தி பீரிட்டுக் கொண்டு வந்தது. அதுவரை ஆஃப் அடித்ததில்லை. சாப்பிட்ட ஸ்நாக்ஸ் எல்லாம் வரிசையாய் மேடைக்கு அருகே இருந்தது. துர்நாற்றம் அந்த இடத்தையே புரட்டி போட்டது. விழாவுக்கு வந்திருந்த அனைவரின் பார்வையும் என் மீது. கல்லூரி முதல்வர் என்னைப் பத்து நாள் சஸ்பென்ட் செய்தார். வீட்டிற்கு ஃபோன் போனது. கல்லூரிக்கு பெற்றோர்களை வரச் சொன்னது கல்லூரி நிர்வாகம். அப்பாவும் வந்தார். கல்லூரி தாளாளரும், முதல்வரும் அப்பாவுக்கு அர்ச்சனைச் செய்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் அப்பாவுக்கு பொறுமை இழந்தார்.

"சார்.. அவன் வயசுப் பையன். கொஞ்சம் முன்ன பின்னத்தான் இருப்பான். இந்த வயசுல நீங்களும் நானும் பண்ணாததையா பண்ணிட்டான்" என்று கேட்டார்.

"சார் உங்க பையன் பர்ஸ்ட் இயர். இங்க இன்னும் மூணு வருஷம் படிக்கணும். அத நெனப்புல வச்சுக்கிட்டுப் பேசுங்க. வருங்கால இன்ஜினியர் மாதிரியா நடந்துக்கிட்டான்? ஏதோ ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டுடண்ட் மாதிரி, குடிச்சிட்டு வந்திருக்கான்.  நான் ஒரு நாளும் குடிச்சதில்லை. இந்த வயசுல குடிக்கிறான். எப்படி இப்படி வளர்த்தீங்க?" என்றார் முதல்வர். தாளாளர் மட்டும் நெலம விபரீதம் ஆகப் போவதைப் புரிந்துக் கொண்டார்.

"சரி சரி நடந்தது நடந்துப் போச்சு. நீங்க அவனுக்கு புத்திமதி சொல்லுங்க. பத்து நாள் சஸ்பென்ட் பண்ணியிருக்கு. இது மாதிரி இனிமே எதுவும் நடக்காம பார்த்துக்கங்க. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். நீங்க போகலாம்." சட்டென்று மீட்டிங்கை முடித்தார்.

தாளாளரை மீறி முதல்வரால் எதுவும் சொல்லமுடியவில்லை. வெளியே வந்ததும் அப்பா, "நீ எதுக்கும் கவலப்படாதேடா. பத்து நாள்தானே. சட்டுனு போயிடும். விக்னேஷ் கிட்ட கேட்டுக்க என்ன பாடம் நடத்தினாங்கனு. அதுக்கப்புறம் அட்டென்டன்ஸ் பர்சென்டேஜ் இருக்குல?"

"இருக்குப்பா. அது ஒன்னும் பிரச்னையில்ல. சாரிப்பா.. நான் தப்பு பண்ணிட்டேன்"

"டேய் இந்த வயசுல நான் செய்யாததையா நீ செஞ்சுட்டே? விடு கழுத!"

அதற்கு மேல் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. அவர்தான் உபதேசம் செய்துக் கொண்டே வந்தார் வீடு வந்து சேரும் வரை.

அந்த இரு வாரங்கள் கல்லூரிக்கு போகவேண்டும், உள்ளே போகவில்லை என்றாலும் வெளியேயிருந்து ஆனந்தியைப் பார்க்கவேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால் போக முடியவில்லை. மனம் கூசியது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்ப்பேன். என்ன சொல்லி என் நிலைமையைப் புரிய வைப்பேன்? சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை. நான் பேசி இதுவரை அவள் என்னை ஏறெடுத்துப் பார்த்தது கூட இல்லை. எப்படி அவளிடம் என் காதலைச் சொல்லப்போகிறேன்?

இரண்டாம் வருடம் அவளோடு lab mate ஆகும் வாய்ப்பு வந்தது. அன்று சந்தோஷப்பட்டது போல் என்றுமே ஆனதில்லை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் Induction and DC motor lab செல்வது எனக்கு என்னமோ தாஜ்மஹாலுக்குச்  செல்வது போல இருக்கும். பதினாறு சோதனைகள் முடிக்கவேண்டும். இதற்காகவே முன்னரே படித்து வைத்துக் கொள்வேன். அவளை இம்ப்ரஸ் பண்ண பேராசியரை கஷ்டமான கேள்விகளெல்லாம் கேட்பேன். இப்படித்தான் ஒரு முறை அவர் கேட்டக் கேள்வி, எப்படி Induction  motor ஸ்டார்ட் ஆகுமென்று கேட்டார். நான், "விரும்ம் விரும்ம்ம் விரும்ம்ம்ம் விரும்ம்ம்ம்ம்ம் விரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு ஸ்டார்ட் ஆகும் சார்" என்றேன். அவர் சிரிக்க எல்லோரும் சிரித்தனர். ஆனந்தியும் என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் ஜோக்கர் ஆனதில் எனக்குக் கவலையில்லை. ஆனால் ஆனந்தி என்னை ஏறெடுத்து பார்த்தாள். அது போதும் எனக்கு. எப்படியாவது அவளோடு பேசும் சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்தேன். ம்ம்ம்ஹூம் வரவேயில்லை. அவளுக்காக ரெண்டு பேனா, ரெண்டு டெஸ்டர், ரெண்டு Galvanometer.. என்று தேவையில்லாத அனைத்தும் எடுத்துப் போனேன். அவள் எதையும் என்னிடம் கேட்டதில்லை. இரண்டாம் வருடமும் பல்ப் வாங்கினேன்.

மூன்றாம் வருடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பிறந்த நாள் அன்று கிரீட்டிங் கார்ட் ஒன்று வாங்கி என் மனதில் இருந்த அனைத்தையும் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதி எடுத்துக் கொண்டு போனேன். நான் போவதற்குள் சீனியர் ஒருவன் வந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான். அவளிடம் அவனும் ஒரு கிரீட்டிங் கார்டை கொடுத்தான். அவள் வாங்கவில்லை. "நாம் நல்ல நண்பர்களாய் இருப்போம். காதல் கீதல் எல்லாம் வேண்டாம். எனக்கு நெறைய படிக்கணும். சாதிக்கணும். அமெரிக்கா போய் எம்.எஸ் பண்ணனும். இந்த காதல் அதுக்கு ஒரு தடையா இருக்கக் கூடாது" என்றாள். எனக்கு சந்தோஷம், கூடவே பயமும் தொற்றிக் கொண்டது. அவள் அவனைக் காதலிக்கவில்லை என்ற சந்தோஷம் இருந்தாலும், என் காதலையும் நிராகரித்து விடுவாள் என்றுப் பட்டது. அன்று சாயங்காலமே அந்த சீனியரை கல்லூரிக்கு வெளியே வைத்து புரட்டி எடுத்துவிட்டேன். நல்லவேளை அவன் சரியான பழம் அதானால் யாரிடமும் சொல்லவில்லை. ஆனாலும் செய்தி எப்படியோ வெளியே தெரிந்தது. ஆனந்திக்கும் தெரிந்தது. மூன்றாம் வருடமும் முடிந்தது.

நான்காம் வருடம்.. கடைசி வாய்ப்பு.. நேரே அவளிடம் சென்றேன்.

"நான் உன்கிட்ட  கொஞ்சம் தனியா பேசணும்" என்று வகுப்புக்குச் சென்றவளைத் தடுத்தேன்.

"இப்ப முடியாது. க்ளாஸ் முடியட்டும் பேசலாம்" என்றாள் ஆனந்தி.

வகுப்பு முடிந்ததும் அவளிடம் சென்று, "நான் உன்ன உயிருக்குயிராக் காதலிக்கறேன். எனக்கு உன்னோட பதில் வேணும், இந்த வருஷம் முடியறதுக்குள்ளே"

"அதுக்கு எதுக்கு அவ்வளவு நாள் வெயிட் பண்ணனும். இப்பவே சொல்றேன். நோ. எனக்கு நெறைய படிக்கணும் சாதிக்கணும் அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல."

"நீ என்ன வேணும்னாலும் படி, ஆனா என் காதலை ஏத்துக்கோ ஆனந்தி" என்றேன்.

"சாரி.. நோ" என்றுச் சொல்லிவிட்டு விருட்டென புறப்பட்டுச் சென்றாள்.

அதன் பிறகு பல முறை முயன்றும் அவள் கேட்பதாக இல்லை. எனக்கேத் தெரியாமல் காலம் மெல்லக் கனிந்தது. கல்லூரியில் அனைவரும் மைசூர் பிருந்தாவன் டூர் சென்றோம். கூட்டம் அலைமோதியது. இதை சாக்காக வைத்துக் கொண்டு எதிரே வரும் பெண்களின் மார்பை யாருக்கும் தெரியாமல் இடித்துக் கொண்டேச் சென்றது ஒரு வாலிபக் கூட்டம். என் கண்களுக்கு தெளிவாய் புரிந்தது. என் நண்பர்களை சுற்றிலும் வரச் சொல்லி எங்கள் வகுப்பு பெண்களை பாதுகாப்பாய் அழைத்துச் சென்றேன். அதை அவள் கவனித்துவிட்டாள். பஸ் ஏறுவதற்கு முன், என் முன்னே வந்து, "தேங்க்ஸ்" என்றாள்.

நான், "எதுக்கு?"

"ம்ம்ம்ம்ம் சும்மாத்தான் சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன்" என்றாள் சிரித்துக் கொண்டே.

அதன் பிறகு பல முறை சகஜமாக என்னோடுப் பேசினாள். என் அருகே உட்கார்ந்தாள். எங்களோடு சாப்பிட்டாள். எங்களோடு திருட்டு தம் அடித்தாள். பீர் ஒரு மடக்கு குடித்தாள். "என்னடா இப்படி கசக்குது. இத எப்படிடா குடிக்கிறீங்க?" தூ தூ வென்றுத் துப்பினாள்.

டூர் முடிய போகும் நாளில் ஒரே மாதிரியான ஸ்வெட்டர் ரெண்டு  வாங்கி வந்தாள். ஒன்றை எனக்குக் கொடுத்துவிட்டு, இன்னொன்று எனது அண்ணனுக்கு என்றாள். கல்லூரி கடைசி நாளும் வந்தது. "சந்திப்போம். பேசுவோம்" என்றுச் சொல்லிவிட்டு போனவள்தான். அதன் பிறகு அவள் சுவடேத் தெரியாமல் போனது. அவளுடைய தோழிகளிடம் விசாரித்ததில் அவள் எங்கள் காதலை வீட்டில் சொல்லியதாகவும்.. வீட்டில் எதிர்த்தார்கள். கல்லூரியிலிருந்து யார் வந்தாலும் பார்க்கப் பேசத் தடை என்றார்கள். நானும் அவளுடைய வீட்டிற்கு சென்றால் பூட்டே பதில் சொல்லியது. அவள் வீட்டுத் தொலைபேசியும் பதில் சொல்லாது ட்ரிங் ட்ரிங் என்ற சோகக் கீதத்தையே வாசித்தது.  கல்லூரி நண்பர்கள் எல்லோரும் பிரிந்தனர். விக்னேஷும் பெங்களூர் சென்றான். நான் அரியர் எல்லாம் முடிப்பதற்குள் இரண்டு வருடம் ஆனது. அதன் பின் வேலைத் தேடி ஒரு நிலைக்கு வருவதற்கு நான்கு வருடமானது. அதன் பின் எங்கு தேடியும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்லூரி 5ம், 10ம், 15ம், 20ம் ஆண்டு ரியூனியனுக்கும் வரவில்லை. எனக்கும் 41 வயதுத் தொட்ட நிலையில் அப்பாவும் அம்மாவும் கல்யாண பேச்சை நிறுத்திவிட்டார். அதன் பிறகு கல்யாணம் செய்து என்ன பயன் என்று விட்டார்களோ என்னவோ. ஆனாலும் எனக்கும் திருமணம் நடந்தது. சௌம்யா தூரத்து உறவு. அவளுக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம்.

காலம் என்னை பக்குவபடுத்தியது. மனைவியை நேசிக்கத் தொடங்கினேன். அவளிடம் எல்லாமும் சொன்னேன். அவள் என்னைத் தேற்றினாள். இல்லறம் தொடங்கியது. என் பெண்ணுக்கு ஆனந்தி என்று அவளே பெயரிட்டாள்.

"என்னங்க என்னங்க என்ன பண்றீங்க. முழிச்சிக்கிட்டே தூங்குறீங்களா" என்றாள் சௌம்யா .

"என்ன சாருக்கு பழைய நினவுகளா? விக்னேஷ் அண்ணா ஃபோன் பண்ணினாரோ?"

"இல்லமா. அப்பாவ நெனச்சேன்.. அப்படியே எண்ணங்கள் எங்கெங்கோ போயிடுச்சு" என்றுச் சமாளித்தேன்.

"இன்னிக்கு அவளுக்கு பத்து மணிக்கு லக்ஷ்மி டீச்சர்கிட்டப் பாட்டு க்ளாஸ் இருக்கு மறந்திடாதீங்க. நீங்கத்தான் கூட்டிக்கிட்டு போகணும். எனக்கு ஏரோபிக்ஸ் க்ளாஸ் இருக்கு அந்த நேரத்துல. அவங்களுக்கு செக் எழுதி வெச்சிருக்கேன். மறக்காம கொடுத்திடுங்க!" என்றாள்.

"எங்க இருக்கு அவங்க வீடு?"

"உங்க பொண்ண வழிச் சொல்ல சொல்லுங்க. கரெக்டா சொல்லுவா. மிஷன்லதான் இருக்கு."

"சரி, நான் பாத்துக்கறேன்"

மணி ஒன்பதரையைத் தொட அவசர அவசரமாய் கிளம்பினேன்.

"ஆனந்தி.. எங்கயிருக்கு உங்க பாட்டு க்ளாஸ்"

"அப்பா மிஷன் புளவார்ட்ல இருக்கிற ஹை ஸ்கூல் பக்கத்தில் இருக்கு"

சரியாக பத்து அடிக்க பாட்டு டீச்சர் வீட்டு வாசலில் நின்றோம். உள்ளே  அவளைக் கூட்டிச் சென்றேன். இங்கே செருப்பைக் கழட்டி வை என்றாள் ஆனந்தி. கழட்டி வைத்து உள்ளே போக... அந்த டீச்சர் முந்தைய க்ளாஸ் பெற்றோர்களிடம் அடுத்து வரப் போகும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். என் சர்ட்டை இழுத்தாள் என் பெண். "அப்பா.. உன்கிட்ட இருக்கிற ஸ்வெட்டர் மாதிரியே இந்த பாட்டு டீச்சர்கிட்டயும் இருக்கு பாரேன்" என்று கிசுகிசுத்தாள். அப்போதுதான் கவனித்தேன்... அது ஆனந்தலக்ஷ்மி. மனதில் ஈட்டி ஏறியது போல இருந்தது. வெளியே வந்து காருக்குள் உட்கார, உள்ளே ஆனந்தியின் வகுப்பில் கடவுள் வாழ்த்து பாடினார்கள். அதே கல்லூரி முதல் வருடம் அவள் பாடியப் பாட்டு. அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.  நான் வண்டியை ஸ்டாட் செய்தேன். ஸ்டீரியோவில், போகுதே போகுதே பாடல் வரி, "தங்கப் பூவே சந்திப்போமா... சந்தித்தாலும் சிந்திப்போமாவில்" வந்து நின்றது. மனைவி எழுதி வைத்திருந்த செக்கில் "லக்ஷ்மி சுப்ரமணியம்" என்று எழுதியிருந்தது!