My world according to me

Thursday, January 31, 2013

ஓய்வு - Short Story

நேற்று வ‌ரை அலுவ‌ல‌க‌ம் சென்று வ‌ந்த‌ என‌க்கு இன்று முத‌ல் ஓய்வு. இருப‌த்திமூன்று வ‌ய‌தில் வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கி, நேற்றோடு முப்ப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ள் ஆகிவிட்ட‌ன‌. ஒரு கிளார்க்காக‌ வேலைக்குச் சேர்ந்து ப‌டிப்ப‌டியாக‌ முன்னேறி டிவிஷ‌ன‌ல் மேலாள‌ராக‌ ப‌ணிபுரிந்து ஒய்வு பெற்றுவிட்டேன். என‌க்கு பிற‌கு வ‌ர‌யிருக்கும் மேலாள‌ர் வ‌ராம‌ல் இருந்து என்னை ப‌ணிக்கு மீண்டும் கூப்பிட‌ மாட்டார்க‌ளா என்று ஒரு ந‌ப்பாசை. இந்த‌ இர‌வே வித்தியாச‌மாக‌ இருந்த‌து. நானும் புர‌ண்டு புர‌ண்டு ப‌டுத்தும் பார்த்தேன் தூக்க‌ம் வ‌ரவில்லை. இதுநாள் வ‌ரை நான் ச‌ற்றும் க‌வ‌னிக்காத‌ சுவ‌ர் க‌டிகார‌ம் என்னைத் துன்புறுத்திய‌து. அத‌ன் முள் ந‌க‌ரும் ஓசை என்னைப் பாடாய் ப‌டுத்திய‌து. இர‌ண்டு தெரு த‌ள்ளி இருக்கும் நாய் குலைக்கும் ச‌த்த‌ம் என‌க்கு தெளிவாய் கேட்ட‌து. ரோட்டில் இரண்டாவ‌து ஆட்ட‌ம் பார்த்து திரும்புவ‌ர்க‌ள் பேசுவ‌து தெளிவாய் கேட்ட‌து என‌க்கு. மெல்லிய‌ நைட் லாம்ப் வெளிச்ச‌த்தில் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் நான் க‌ண்ட‌ பெட்ரூமா இது? ம‌ன‌தை அச்ச‌ம் உட்கொண்ட‌து. ம‌ன‌ம் தேவையில்லாம‌ல் ப‌த‌றிய‌து. இது நாள் வ‌ரை நான் இதை எதையுமே நான் கேட்ட‌தில்லை, உண‌ர்ந்த‌தில்லை. இதுவே முத‌ல் முறை. என‌க்கோ ப‌ய‌ம். இனி இப்ப‌டித்தான் இர‌வுக‌ள் தொட‌ருமோ? இர‌வு முழுவ‌தும் தூங்க‌ முடிய‌வில்லை. எப்ப‌டி வ‌ரும் தூக்க‌ம்?

எப்போது தூங்கினேன் என்று தெரிய‌வில்லை. மூன்று ம‌ணி இருக்கும். ஏனெனில் இர‌ண்டு ஐம்ப‌த்தியேழுக்கு ஒரு குடிகார‌ன் உள‌றிக் கொண்டே சென்ற‌து நினைவிற்கு வ‌ந்தது. காலை எழுந்த‌வுட‌ன் இதைவிட‌ அதிக‌மாய் ப‌ட‌ப்போகிறேன் என்று அப்போது உண‌ர‌வில்லை. விடிய‌ற்காலை ஐந்து ம‌ணிக்கு பால் பாக்கெட் போடும் ந‌ப‌ரின் ம‌ணியோசை எழுப்பிய‌து. இது நாள் வ‌ரை இந்த‌ ஓசையைக் கேட்ட‌து இல்லை. இதுவே முத‌ல் முறை. என் மனைவி என்னிட‌ம், "நீங்க‌ முளிச்சுக்கிட்டு தானே இருக்கீங்க‌. நீங்க‌ளே இனிமேல் வாங்கி வைங்க‌. இனி இது உங்க‌ வேலை" என்றாள். என‌க்கோ ப‌டு கோப‌ம் வ‌ந்த‌து. ஆனால் அவ‌ள் சொல்வ‌திலும் நியாய‌ம் இருக்கிற‌து. அவ‌ளும் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளாய் இந்த‌ வேலையைச் செய்து வ‌ந்த‌வ‌ள் தானே! அவ‌ளுக்கு ஓய்வு கொடுப்போமே என்று ச‌மாதான‌ம் ப‌ண்ணிக் கொண்டு, "பால் கார்டு எங்கே" என்றேன். அவ‌ளிட‌மிருந்து குற‌ட்டையே ப‌திலாய் வ‌ந்த‌து. ஒரு வ‌ழியாக‌ அதைத் தேடி க‌ண்டுபிடித்து போய் வாங்குவ‌த‌ற்குள் மூன்று முறை ம‌ணியோசையை அழுத்திவிட்டான். அவ‌னுக்கு என்ன‌ அவ‌ச‌ர‌மோ?! எத்தனை லிட்ட‌ர் வாங்க‌வேண்டும் என்றுக் கூட‌ தெரிய‌வில்லை. ச‌ரி அவ‌னிட‌மே கேட்டுவிட‌லாம் என்று க‌த‌வைத் திற‌ந்து, கேட்டேன். சிரித்துவிட்டான், "என்னா சார் எப்ப‌வும் அம்மாத்தான் வாங்குவாங்க‌.. இன்னிக்கு நீ வாங்குறே.. ரிட்ட‌ய‌ர் ஆகிட்டியா?" என்றான். என‌க்கோ ஆச்ச‌ர்ய‌ம். எப்ப‌டி தெரியும் அவ‌னுக்கு? என‌க்கு புல‌ப்ப‌ட‌வில்லை. என் கையில் இர‌ண்டு அரை லிட்ட‌ர் பாக்கெட் பாலை கொடுத்துவிட்டு, "கார்டுல‌ இருக்கும் பார் சார். நீங்க‌ வ‌ழ‌க்க‌மா ஒரு நாளைக்கு ஒரு லிட்ட‌ர் வாங்குறீங்க‌. வ‌ர்ட்டா" என்றான் அண்ணாம‌லை போல்!

ஐந்து ம‌ணிக்கு வெகு சில‌ நாட்க‌ளே எழுந்திருக்கிறேன். ஆனால் இன்று என்ன‌வோ புதிதாய் ப‌ள்ளிக்குச் செல்லும் மாண‌வ‌னின் அச்ச‌ம் ம‌ன‌தில் உண‌ர‌ முடிந்த‌து. க‌த‌வை மூடிவிட்டு, ஃப்ரிட்ஜுக்குள் பாலை வைத்தேன். அடுத்து என்ன‌ செய்வ‌து என்று விள‌ங்க‌வில்லை. ஒரு வ‌ழியாக‌ காலை க‌ட‌ன்க‌ளை முடித்து, குளித்து முடித்துவிட்டு வ‌ந்த‌ போது ம‌ணி ஐந்த‌ரை ஆகி இருந்த‌து. ம‌ற்ற‌ நாட்க‌ளில் இதுவே ஒரு ம‌ணி நேர‌ம் எடுக்குமே, இன்று ம‌ட்டும் என்ன‌ இப்ப‌டி மெதுவாக‌ நேர‌ம் செல்கிற‌து? அதுவுமில்லாம‌ல் இன்று நாம் அதிக‌ நேர‌ம் அல்ல‌வா குளித்தோம் என்று ம‌ன‌திற்குள் எண்ண‌ம் ஓடிய‌து. காம்ப‌வுண்ட் சுவ‌ரில் அன்றைய‌ தின‌ச‌ரி நாளித‌ழைக் க‌ண்டேன். அதை எடுத்து வ‌ந்து ப‌டிக்க‌ உட்கார்ந்தேன். ப‌சி வ‌யிற்றை கிள்ளிய‌து. சித‌ம்ப‌ர‌த்தில் வேலை செய்யும்போது த‌னியாக‌ ஆறு மாத‌ கால‌ம் வேலைப் பார்த்தேன். அப்போது ச‌மைக்க‌க் க‌த்துக் கொண்ட‌து இப்போது உத‌வுகிற‌து. காஃப்பி போட்டு குடிக்க‌லாம் என்று எழுந்து அடுப்ப‌ங்க‌ரைக்கு வ‌ந்தால் மேடை முழுவ‌தும் எறும்பு. அதைச் சுத்த‌ம் செய்து, காஃப்பி போட்டு முடிக்க‌ ஆறேகால்தான் ஆன‌து. இன்ன‌மும் அவ‌ள் குற‌ட்டைச் ச‌த்த‌ம் ஹால் வ‌ரை கேட்ட‌து. பாவ‌ம் அவ‌ளுக்கும் ஓய்வு தேவை. பேப்ப‌ர் ப‌டித்து முடிக்கும் போது ம‌ணி ஏழு. ஒரு வ‌ழியாக‌ சுப‌த்ரா எழுந்து வ‌ந்தாள்.

"ஏன் தூக்க‌மே வ‌ர‌லையா? புர‌ண்டு புர‌ண்டு தூங்க‌ பார்த்தீங்க‌. இதுதானே முத‌ல் நாள் போக‌ப் போக‌ ச‌ரியாயிடும். நான் நிம்ம‌தியா தூங்கினேன். டிகாக்ஷ‌ன் போட்டீங்க‌ளா. ம‌ன‌ம் தூக்குது!"

"ம்ம். போட்டு வ‌ச்சிருக்கேன். போய் குளிச்சிட்டு வா, நான் காஃப்பி க‌ல‌ந்து வைக்கிறேன்."

"என்ன‌ டிப‌ன் செய்ய‌ட்டும்"

"நீ முத‌ல்ல‌ குளிச்சிட்டு வா. அப்புற‌ம் யோசிக்க‌லாம்"

"ச‌ரி"

அவ‌ள் ந‌க‌ர‌ நான் மீண்டும் தின‌ச‌ரியில் மூழ்கினேன்.

"இந்தாங்க‌ சாப்பிடுங்க‌" என்றாள் சுப‌த்ரா. என‌க்கோ ஆச்ச‌ர்யம். எப்ப‌டி இவ்வ‌ள‌வு சுறுசுறுப்பா செய்தாள். விய‌ந்துக் கொண்டே த‌ட்டிலிருந்த‌ வெண்பொங்க‌லைச் சுவைத்தேன். பாவ‌ம் அவ‌ளுக்கு ஆங்காங்கே சுறுக்க‌ங்க‌ள் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. ந‌ரை முடிக‌ளும் காதோர‌ம் தென்ப‌ட்ட‌ன.

"வெண்பொங்க‌ல் பிர‌மாதம்டி. இன்னிக்கு என்ன‌ ப்ளான்?"

"ஒன்னும் பெரிசா இல்லை. ப‌த்து ம‌ணிக்கு ரேஷ‌ன் க‌டை, ப‌தினோரு ம‌ணிக்கு க‌ர‌ண்ட் பில், ப‌ன்னிரெண்டு ம‌ணிக்கு ப்ள‌ம்ப‌ர் வ‌ருகிறார். கூட‌மாட‌ இருக்க‌ணும். ஒரு ம‌ணிக்கு சாப்பாடு. ஒன்ற‌ரை டு மூணு தூக்க‌ம். மூணேக் காலுக்கு லைப்ர‌ரிக்கு போய் புக்ஸ் ரிட்ட‌ர்ன். புது புக்ஸ் கொஞ்ச‌ம் எடுத்து வ‌ர‌ணும். ஐந்து ம‌ணிக்கு பார்க்கில் ஈவ்னிங் வாக். ஆறு ம‌ணிக்கு வீட்டுக்கு வ‌ந்துட‌ணும். இன்னிக்கு ம‌ட்டும் தான் இந்த‌ வேலையெல்லாம். நாளைக்கு மாறும்" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

என‌க்கு த‌லைச் சுற்றிய‌து. அவ‌ள் சொன்ன‌ எல்லாவ‌ற்றையும் செய்தேன். கூட‌வே சில‌ காரிய‌ங்க‌ளும். அடுப்பு மேடைக்கு எறும்பு ம‌ருந்து. அவ‌ள் கால் பித்த‌ வெடிப்புக்கு ம‌ருந்து. அவ‌ளுக்கு என‌ர்ஜி த‌ர‌ ஊட்ட‌ச் ச‌த்துக்க‌ள். வீட்டில் சில‌ விள‌க்குக‌ள் எரிய‌ தேவையான‌ ப‌ல்புக‌ள். அவ‌ள் வீட்டுக்குள் அணிய‌ செருப்பு. கேஸ் வேறு குறைவாய் இருந்த‌து. அத‌ற்கும் சொல்லிவிட்டேன். அவ‌ள் ம‌ருந்துக‌ள் தீர்ந்துவிட்ட‌து, வாங்கி வ‌ந்தேன். கூட‌வே அவ‌ளுக்கு பிடித்த‌ ப‌ல‌கார‌ங்க‌ள். இனி நான் அவ‌ளுக்கு உத‌வியாய் இருக்க‌வேண்டும். அவ‌ளுக்கும் ஓய்வு தேவை. அன்று ப‌டுக்கையில் ப‌டுத்தேன், தூங்க‌ வெகு நேர‌ம் பிடிக்க‌வில்லை. அவ‌ள் அணைப்பில் க‌த‌க‌த‌ப்பாய் மெல்லிய‌ குற‌ட்டையுட‌ன் ஒன்ப‌த‌ரைக்கெல்லாம் தூங்கிவிட்டேன். இனி என‌க்கு ஓய்வில்லை!

Friday, January 18, 2013

போலீஸ்கார‌ன் ‍- சிறு க‌தை


"இனிமேலாவ‌து இந்த‌ த‌ப்பெல்லாம் ப‌ண்ண‌க் கூடாது. காலேஜ் ப‌டிக்க‌ற‌ பைய‌னுக்கு எதுக்கு இந்த‌ வேலை. ப‌டிச்சு முன்னேற‌ வ‌ழிய‌ பாரு. இன்னொரு முறை இதே த‌ப்பைப் ப‌ண்ணினேனு தெரிஞ்சுது, தொலைச்சுடுவேன் தொலைச்சு" என்றான் இன்ஸ்பெக்ட‌ர் பிர‌பாக‌ர‌ன். அவ‌ன் அத‌ட்டிய‌து ஒரு மாற்ற‌த்தை அந்த‌ பைய‌னுக்குள் ஏற்ப‌டுத்திய‌தை அங்கிருந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் உண‌ர்ந்த‌ன‌ர். அந்த‌ பைய‌னின் பாட்டி பிர‌பாக‌ர‌னின் காலில் விழ‌ப் போனாள்.

"என் காலில் விழுந்து என்னை தெய்வ‌மாக்காதீங்க‌. ஒழுங்கா பையனை வ‌ள‌ர்க்க‌ பாருங்க‌ள். செந்தில் அண்ணே நான் கிள‌ம்புறேன்." கான்ஸ்ட‌பிள் செந்தில் த‌லையாட்டினார். வ‌ழி நெடுக‌ வெயிலின் உக்கிர‌ம் அதிக‌மாவ‌து போல் தோன்றிய‌து அவ‌னுக்கு. வீட்டுக்கு ஒரு ஏசி போட‌ணும் என்று எண்ணிய‌வாறே வீடு வ‌ந்து சேர்ந்தான்.

"ய‌ப்பா.. என்ன‌ வெயிலு.. என்ன‌ வெயிலு.. கொளுத்துது வெளியில‌.. எஸ்.பி. வேற BP ஏத்துறாரு.. ஹூம்" என்றுச் ச‌லித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். தொப்பியை க‌ழ‌ட்டி ச‌ட்டை ப‌ட்ட‌னை திற‌ந்துவிட்டு, ஃபேன் சுவிட்சைத் த‌ட்டிவிட்டு சோஃபாவில் தொப்பென்று விழுந்தான். அப்போது ம‌ணி இர‌ண்ட‌ரை. ஞாயிற்றுக்கிழ‌மை அதுவுமாக‌ வேலைக்கு போய்விட்டு அப்போதுதான் வ‌ந்தான். அது ச‌ரி போலிஸ்கார‌னுக்கு ஏது நாள் கிழ‌மை. அவ‌ன் வ‌ருகையை எதிர்பார்த்த‌து போல‌ அவ‌னின் செல்ல‌ ம‌க‌ன் முகில் ஓடி வ‌ந்து அவ‌ன் க‌ழுத்தை இறுக்கிக் க‌ட்டிக் கொண்டான்.

"சார‌தா.. சார‌தா.. அங்கே என்ன‌டி ப‌ண்றே அடுப்ப‌டியில‌? இங்க‌ வ‌ந்து இவ‌னைக் கூட்டிக்கிட்டு போ. நேர‌ம் கால‌ம் தெரியாம‌ மேல‌ வ‌ந்து விழுந்துக்கிட்டு" என்றுக் கோப‌மாக‌க் க‌த்தினான் பிர‌பாக‌ர‌ன். அவ‌ன் கோப‌த்தைப் புரிந்துக் கொண்டு வில‌கிக் கொண்டான் முகில். சார‌தா அடுப்ப‌டியிலிருந்து விருட்டென‌ வெளியில் வ‌ந்தாள்.

"உங்க‌ கோவ‌மெல்லாம் புள்ள‌க்கிட்ட‌ காட்டாதீங்க‌. ஒரு நாளாவ‌து வீட்டுக்கு சீக்கிர‌ம் வ‌ந்து குடும்ப‌த்தோடு இருக்க‌ணும்னு தோணுதா உங்க‌ளுக்கு. நீங்க‌ எப்ப‌ வ‌ருவீங்க‌ன்னு ரொம்ப‌ நேர‌மா காத்துக்கிட்டு இருக்கான் உங்க‌ புள்ளை. புள்ளை மேல‌ அக்க‌றை இருந்தாதானே? எப்ப‌ பாரு வேலை வேலை.. அதையே க‌ட்டிக்கிட்டு அழுங்க‌" என்று க‌ண‌வ‌னை ஒரு பிடி பிடித்தாள் சார‌தா.

"ஆமாம்டி வெளியில‌ போயிட்டு க‌ளைப்பா வ‌ந்து உட்கார்ந்த‌ உட‌னே க‌ழுத்தைப் பிடிச்சு இழுத்தா கோவ‌ம் வ‌ராதா? கொஞ்ச‌ம் நேர‌ம் க‌ழிச்சு வ‌ந்து கொஞ்சினால் ஆகாதா" என்று த‌ன் ஆத‌ங்க‌த்தைச் சொன்னான் பிர‌பாக‌ர‌ன். அவ‌னின் கோவ‌ம் ச‌ற்று த‌ணிந்து இருந்த‌தை உண‌ர்ந்துக் கொண்டாள் சார‌தா. தான் அத‌ட்டிய‌து வேலைச் செய்துவிட்ட‌தால் அவ‌ள் கோவ‌மும் குறைந்துவிட்ட‌து.

"என்ன‌ சாப்பாடு இன்னைக்கு?"

"மீன் குழ‌ம்பு, மீன் வ‌றுவ‌ல், ர‌ச‌ம், த‌யிர். நீங்க‌ சொன்ன‌வுட‌னே மீனை பொறிக்க‌றேன்"

"என்ன‌ மீன்"

"உங்க‌ளுக்கு புடிச்ச‌ கெளுத்தி மீனு. மார்க்கெட்டுக்கு போய் நானும் த‌ம்பியும் வாங்கினோம். என்னைப் பார்த்த‌தும் அந்த‌ க‌டைக்கார‌ர் ந‌ல்ல‌ மீனா போட்டுக் கொடுத்தார். காசு வேண்டாம் என்று சொன்னாரு. நான் தான் சாருக்கு அதெல்லாம் பிடிக்காதுனு சொல்லி ப‌ண‌த்தைக் கொடுத்தேன்" என்று பெருமையோடு சொன்னாள்.

ப‌சி வேறு வ‌யிற்றைக் கிள்ளிய‌து பிர‌பாகர‌னுக்கு, "நான் போய் குளிச்சிட்டு வ‌ர்றேன். நீ பொறிச்சு வை" என்றான்.

"அப்பா, சாப்பிட்டு முடிச்சிட்டு என் கூட‌ விளையாடுவீங்க‌ளா?"

"ச‌ரிடா"

குளித்துவிட்டு வேக‌ வேக‌மாய் வ‌ந்து சாப்பிட்ட உட்கார்ந்தான் பிர‌பாக‌ர‌ன்.

"நீங்க‌ எல்லாம் சாப்பிட்டாச்சா?" என்று கேட்டான்.

"ம்ம் ஆச்சு. என்ன‌ டென்ஷ‌ன் ஆபிஸ்ல‌?" என்று ஆர்வ‌மாய் கேட்டாள் சார‌தா.

"ஒரு கொலைக் கேசு. செத்த‌து ஹை புரோஃபைல் பிசின‌ஸ்மேன். துப்பு துல‌ங்க‌மாட்டேங்குது. என‌க்கு ந‌ல்லா தெரியுது இது கொலைன்னு. ஆனா எஸ்.பி அவ‌ச‌ர‌ப்ப‌டுத்த‌றார். போஸ்ட்மார்ட்ட‌ம் ரிப்போர்ட்டும் கொஞ்ச‌ம் இடிக்குது. டாக்ட‌ரும், எஸ்.பியும் இதுல‌ ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்டு இருப்பாங்க‌ன்னு தோணுது. ஆனா வ‌லுவா ஒரு ஆதார‌ம் கிடைச்சா போதும்.  செத்த‌ பிஸின‌ஸ்மேனின் பார்ட்ன‌ர் மேல‌ என‌க்கு ட‌வுட் இருக்கு. ஆனா அந்த‌ ஆளை விசாரிக்க‌ விட‌ மாட்டேங்கிறாரு எஸ்.பி . த‌ற்கொலை தானே. கேச‌ எப்ப‌ முடிப்பேன்னு கேட்டு தொல்லை ப‌ண்றாரு. போஸ்ட்மார்ட்ட‌ம் ப‌ண்ணின‌ டாக்ட‌ரும் த‌ற்கொலைன்னு எழுதிக் கொடுத்திட்டாரு. ஒரு க்ளு கிடைச்சா போதும். டாக்ட‌ரையும், எஸ்.பியையும் ஒரு பிடி பிடிச்சுடுவேன்."  மீனைச் சுவைத்த‌ப‌டியே இன்னும் ஒரு துண்டை எடுத்துக் கொண்டான்.

ஒரு வ‌ழியாக‌ சாப்பிட்டு முடித்து அருகில் உட்கார்ந்து இருந்த‌ ம‌க‌னின் த‌லையை செல்ல‌மாய் கோதினான்.

"அப்பாடி இப்ப‌த்தான் புள்ளைக் க‌ண்ணுக்கு தெரிய‌றானா" என்றுச் செல்ல‌மாய் வம்புக்கு இழுத்தாள்.

"ப‌சிடீ.. நான் என்ன‌ செய்ய‌ட்டும். டேய் நீ இப்ப‌ சொல்லுடா என்ன‌ வெளையாட‌லாம்?" சொல்லிவிட்டானேத் த‌விர‌ அவ‌ன் ம‌ன‌ம் இன்னும் அந்த‌ கொலை வ‌ழ‌க்கையேப் ப‌த்தியே எண்ணிக் கொண்டிருந்தது.

அப்பாவும் பைய‌னும் வெகு நேர‌ம் விளையாடிக் கொண்டிருந்த‌ன‌ர். இப்போது வ‌ழ‌க்கை சுத்த‌மாக‌ ம‌ற‌ந்துவிட்டான். நேர‌ம் போன‌தே பிர‌பாக‌ர‌னுக்குத் தெரிய‌வில்லை. மாலை ஐந்து ம‌ணிக்கு சார‌தா ப‌க்கோடா பொரித்து எடுத்துக்கொண்டு வ‌ந்தாள். ஒவ்வொன்றாய் எடுத்துச் சாப்பிட்ட‌வ‌னுக்கு ஒரு சில‌ ப‌க்கோடாக்க‌ள் க‌ருகி இருப்ப‌தைப் பார்த்தான். முகில் அதைக் கையில் எடுத்து, "அம்மா திருப்பிப் போட‌ ம‌ற‌ந்துட்டா போல‌. பாருங்க‌ அப்பா, இந்த‌ ப‌க்க‌ம் ந‌ல்லாத்தான் இருக்கு. ஒரு ப‌க்க‌ம்தான் க‌ருகி இருக்கு. ஆனாலும் டேஸ்டி!"

ஏதோ பொறித் த‌ட்டிய‌து பிர‌பாக‌ர‌னுக்கு. அந்த‌ ப‌க்கோடா க‌ருகிய‌ வித‌ம் அவ‌னுக்கு ஏதோ ஒன்றை‌ச் சொல்லிய‌து. ம‌ன‌துக்குள் அவ‌னுக்கு அந்த‌ கொலை வ‌ழ‌க்கு முத‌லிலிருந்து ஓடிய‌து. அவ‌ன் தேடிய‌ வ‌லுவான‌ ஆதார‌ம் சிக்கிய‌தை உண‌ர்ந்து கொண்டான்.

அலைபேசியைக் கையில் எடுத்து அந்த‌ பிஸின‌ஸ் பார்ட்ன‌ருக்குப் ஃபோன் போட்டான்.

"என‌க்கு ஒரு முக்கிய‌மான‌ ஆதார‌ம் கிடைச்சிருக்கு. உங்க‌கிட்ட‌ விசார‌ணை ப‌ண்ண‌ வேண்டியிருக்கு. கொஞ்ச‌ம் ஸ்டேஷ‌ன் வ‌ரைக்கும் வ‌ர‌ முடியுமா?"

அடுத்த‌ முனையில் ப‌த‌ட்ட‌த்துட‌ன், "என்ன‌ சார் கிடைச்சிருக்கு? என்னைச் ச‌ந்தேக‌ப்ப‌ட‌றீங்க‌ளா?"

"இல்லை. நீங்க‌ வாங்க‌ நேரில் பேசிக்குவோம்" என்றுச் சொல்லி ஃபோனை ப‌ட‌க்கென்று துண்டித்தான்.

"சார‌தா, என‌க்கு ஒரு ந‌ல்ல‌ க்ளு கொடுத்திருக்கே. நான் போய் விசார‌ணை ப‌ண்ண‌ வேண்டியிருக்கு. நீயும் த‌ம்பியும் சாப்பிட்டு ப‌டுத்துத் தூங்குங்க‌. நான் சீக்கிர‌ம் வ‌ந்திடுவேன்."

"என்ன‌ங்க‌ நீங்க‌? இப்ப‌த்தான் வ‌ந்தீங்க‌.அதுக்குள்ள‌ போறேன்னு சொல்றீங்க‌.. என‌க்கு வ‌ர‌ வ‌ர‌ உங்க‌ போக்கே புடிக்க‌லீங்க‌.. ஹூம்" என்று பொறுமினாள். அவ‌ளைச் ச‌மாத‌ன‌ம் ப‌ண்ணிவிட்டு வீட்டை விட்டு புல்ல‌ட்டில் ஏறி ஆபிஸ் வ‌ர‌ ஏழு ம‌ணி ஆன‌து.

அவ‌ன் நினைத்த‌து போல‌வே அங்கே எஸ்.பியும் டாக்ட‌ரும் இருந்த‌ன‌ர். பொறி வைத்த‌து அந்த‌ மூவ‌ருக்கும் தானே என்று ம‌ன‌சுக்குள் எண்ணி, "என்ன‌ சார் நீங்க‌ இந்த‌ நேர‌த்தில் இங்க‌?" என்றான் பிர‌பாக‌ர‌ன்.

"ஏன்யா இப்ப‌டி டார்ச‌ர் ப‌ண்றே? நான் தான் கேஸை முடி.. ஆதார‌ம் எல்லாம் ச‌ரியா இருக்கு. ச‌ரி ச‌ரின்னு த‌லையை ஆட்டிட்டு இப்ப‌ எதுக்காக‌ இவ‌ரை வ‌ர‌ச் சொல்லி இருக்கே"

"உள்ளே போய் பேசுவோம் சார். யாருமே இல்லையா? நீங்க‌ ம‌ட்டும்தான் இருக்கீங்க‌ளா செந்தில் அண்ணே?" என்று கான்ஸ்ட‌பிள் செந்திலைக் கேட்டான். அவ‌ரும், "ரைட்ட‌ர் இப்ப‌த்தான் வெளியே போனாரு. ஏட்ட‌ய்யா த‌லைய‌ வ‌லிக்குதுன்னு கிள‌ம்பிட்டார். நீங்க‌ வ‌ருவீங்க‌ன்னு நான் எதிர்பார்க்க‌லை சார்" என்றார் ஒரு வித‌ ப‌ய‌த்துட‌ன்.

"ஒண்ணுமில்லை அண்ணே. நீங்க‌ போய் நாலு டீ வாங்கிட்டு வாங்க‌." அப்ப‌டி சொன்னால் கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ ப‌க்க‌மே வ‌ர‌க்கூடாது என்று அர்த்த‌ம். கான்ஸ்ட‌பிள் செந்தில் விருட்டென‌ அங்கிருந்து புற‌ப்ப‌ட்டார்.

"என்ன‌ய்யா புதுசா ஆதார‌ம் இருக்குன்னு சொன்னியாமே?"

"ஆமாம் சார். இவ‌ர் கொடுத்த‌ வாக்குமூல‌ம் ப‌டி இவ‌ரும் இவ‌ருடைய‌ பார்ட்ன‌ரும் ம‌ட்டும்தான் ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ இட‌த்தில் இருந்திருக்காங்க‌. ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ போது இவ‌ர் கீழே இருந்த‌ சினிமா ஹாலில் உட்கார்ந்து சினிமா பார்த்துக்கிட்டு இருந்தோம் என்று சொல்லியிருக்கார்." என்று கொஞ்ச‌ம் இடைவெளி விட்டான்.

"ஆமாம் இன்ஸ்பெக்ட‌ர். என் ஃப்ரெண்டு மேல‌ போய் குளிச்சுட்டு வ‌ர்றேன்னு சொன்னான். ச‌ரி குளிச்சிட்டு வ‌ர‌ட்டும்னு நான் ப‌ட‌ம் தொட‌ர்ந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு பார்த்தா வீட்டுக்குள்ளே ஏதோ எரிய‌ற‌ மாதிரி தீஞ்ச‌ வாச‌னை." என்றார் ப‌த‌ட்ட‌த்துட‌ன்.

தொட‌ர்ந்து ப‌த‌ட்ட‌த்துட‌ன், "மேலே போய் அவ‌னை காப்பாத்த‌லாம்னு போனேன். அந்த‌ ரூம் க‌த‌வை எட்டி உதைச்சேன். அன‌லாய் கொதிச்சுக்கிட்டு இருந்திச்சு அந்த‌ இட‌மே. என்னால‌ அவ‌னைக் காப்பாத்த‌ முடிய‌லை" என்று ஓவென்று அழ‌த் தொட‌ங்கினார் பார்ட்ன‌ர்.

"அவ‌னுக்கு ந‌ல்ல‌ இல‌கின‌ ம‌ன‌சு சார். ரெண்டு நாள் முன்னாடி தான் பிஸின‌ஸ்ல‌ ஒரு சின்ன‌ சிக்க‌ல். தாங்க‌ முடியாம‌ல் போய் சேர்ந்துட்டான். அவ‌ன் குடும்ப‌த்தை எப்ப‌டி தேத்த‌ப் போறேன்னே தெரியலை" என்றார் விசும்ப‌லுட‌ன்.

எஸ்.பி, "நீங்க‌ அழாதீங்க‌ அழ‌க‌ப்ப‌ன். எல்லாத்துக்கும் கால‌த்துக்கிட்ட‌ ப‌தில் இருக்கு." அங்கு ந‌ட‌ப்ப‌தை ஒரு வித‌ க‌ல‌வ‌ர‌த்துட‌ன் டாக்ட‌ர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

"பிர‌பாக‌ர‌ன், நேரா விஷ‌ய‌த்துக்கு வா. என்ன‌ ஆதார‌ம் க‌ண்டுபிடிச்சே?" என்றார் எஸ்.பி. அந்த‌ குர‌லில் அதிகார‌ம் இருந்தாலும் ச‌ற்று ப‌ய‌த்தினையும் பிர‌பாக‌ர‌னால் உண‌ர‌ முடிந்த‌து.

"எல்லாத்தையும் ச‌ரியாத்தான் செஞ்சு இருக்கீங்க‌. ரூம் பூரா  எரிந்த‌து போல‌ ஒரு செட்ட‌ப். க‌த‌வை உடைச்சு வெச்ச‌து. ஆனால் ஒரு விஷ‌ய‌த்தை ம‌ற‌ந்துட்டீங்க‌. த‌ற்கொலை ப‌ண்ணிக்கிட்ட‌வ‌ருக்கு ஏன் முதுகு ப‌க்க‌ம் ஒரு தீக்காய‌மும் இல்லை?  ப‌டுத்துக்கிட்டா ம‌ண்ணெணெய‌ மேல‌ ஊத்திப்பான்? அதுவும் இல்லாம‌ க‌த‌வை உடைச்சீங்க‌ ச‌ரி. ஆனா க‌த‌வு உள்ப‌க்க‌மா இல்லையா விழுந்து இருக்கும். இந்த‌ ஃபோட்டோஸ் எல்லாம் பாருங்க‌ சார். செத்துப் போன‌வ‌னின் முதுகு ப‌க்க‌ம் அப்ப‌டியே இருக்கு." என்று மூவ‌ரையும் விழிங்கிவிடுவ‌துப் போல‌ பார்த்தான். விய‌ர்த்து கொட்டிய‌து மூவ‌ருக்கும். ச‌ரிதான் நாம் வ‌கையா மாட்டிக் கொண்டோம். என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் திருதிருவென‌ முழித்த‌ன‌ர். பேய் அறைந்த‌து போல‌ மூவ‌ரும் ஒன்றுமே சொல்லாம‌ல் உட்கார்ந்து இருந்த‌ன‌ர்.

அங்கு நில‌விய‌ ம‌யான‌ அமைதியை பிர‌பாக‌ர‌னே க‌லைத்தான், "என‌க்கு வெயிட்டா ஒரு தொகையை வெட்டுங்க‌.. இந்த‌ கேசை ஒண்ணும் இல்லாம‌ நான் பாத்துக்க‌றேன்" என்றான் தெனாவெட்டாக‌!